
திமுக அரசு எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். சிவகாசியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக,காங்கிரஸ், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர் அதிமுக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அப்போது பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி; ஆளும் திமுக எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது, திமுக ஆட்சியில் தக்காளி விலை, உணவு பொருள்களின் விலை உயர்வடைந்துள்ளது. மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும், எம்ஜிஆர், அம்மா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆண்ட அதிமுக ஆட்சி காலங்களில் மக்களை பாதிக்காத வகையில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. மக்கள் கஷ்டப்படும் நிலைமையை மாற்ற நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆளும் இயக்கமாக இருக்க வேண்டிய நாம் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஆட்சியை இழந்தோம், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

மக்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்றி தருவோம், மாற்று கட்சியினரின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்பதால் மாற்று இயக்கத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அனைவரையும் வரவேற்போம். மதிப்பளிப்போம் என பேசினார். நிகழ்ச்சியில் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன்,சிவகாசி மாநகராட்சி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம்,லட்சுமிநாராயணன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்டச் செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி தலைவர் என். ஜி.ஒ. காலனி மாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

