விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திமுக நிர்வாகியின் இல்லத் திருமணவிழாவில் வைக்கப்பட்ட திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அகரத்துப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதற்காக அந்த பகுதியில் அமைச்சர்களை வரவேற்க திருச்சுழி சாலையில் ஏராளமான திமுக கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. அத்துடன் பல பேனர்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
செவல்பட்டி கார்த்திகேயன் நகரில் வசித்து வரும் சண்முகவேல் என்ற விவசாயி அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுக கொடிக்கம்பம் அவரது முகத்திலேயே சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் விவசாயி சண்முகவேலின் வாய் கிழிந்து 5 பற்கள் உடைந்து விட்டன. படுகாயம் அடைந்த சண்முகவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் குறித்து சண்முகவேலின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு கம்பங்கள் அமைத்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.