• Thu. Apr 24th, 2025

பிரேமலதா விஜயகாந்த்- கைகோர்த்து தமிழக மக்களுக்காக தேமுதிக போராடும் என தெரிவிப்பு

ByVasanth Siddharthan

Mar 16, 2025

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக நாடாளுமன்ற தெகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக போராடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழாவில் பங்கேற்பதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பழனிக்கு வருகை தந்தார். அவருக்கு தேமுதிகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரேமலதா நிர்வாகிகளின் குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து தனியார் தங்கும் விடுதிக்குச் சென்ற பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தேமுதிக வரவேற்கிறது என்றும், அந்த 2006 ஆம் ஆண்டு தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற பல்வேறு அறிவிப்புகளை, இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்றும், குறிப்பாக தமிழக விவசாயிகளை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று வேளாண் தொழில்நுட்பங்களை அறிந்து அதற்கேற்ப தமிழகத்தில் விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது என்றும், அதேபோல மெட்ரோ ரயில், கட்டுமானம், வேலைவாய்ப்பு, மகளீர் திட்டம் என நல்லவிதமாக உள்ளது என்றும் பிரேமலதா தெரிவித்தார்.

டாஸ்மாக் விவகாரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என அமலாக்கத்துறை அறிவித்தாலும் அது நிரூபிக்கப் பட வேண்டும் என்றும், ஏற்கனவே செந்தில்பாலாஜி சிறை சென்று வந்துள்ள நிலையில் ஊழல் என்று உண்மை இருந்தால் அதை மக்களுக்கு முன்பு நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதே போல மத்திய அரசின் முன்மொழிக் கொள்கைக்கு தேமுதிக ஆதரவாக உள்ளது என்றும், தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தொகுதி வரையறை என்ற பெயரில் தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டால் தமிழக அரசுடன் தேமுதிக கைகோர்த்து தமிழக மக்களுக்காக எதிர்த்துப் போராடும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.