• Thu. Apr 25th, 2024

ஆண்டிபட்டி அருகே 2500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத்தில் வளரி ஆயுதமேந்திய வீரன் கண்டுபிடிப்பு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை கிராமத்தின் அருகே அமைந்துள்ளது மூணாண்டிபட்டி கிராமம். அப்பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழகத்தின் நிறுவனர் பாவெல் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் மேலாய்வு செய்த போது அதில், 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் தொல் ஆயுதமான வளரி ஏந்திய வீரனின் பாறை ஓவியம் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பாறை ஓவியத்தை ஆய்வு செய்த தொல்லியல் அலுவலர் யதீஸ்குமார், இதனை ஆயுதம் ஏந்திய வீரர்கள் எனப் பொதுவாக ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இப்பாறை ஓவியத்தை மேலாய்வு செய்தபோது, வாள் ஏந்திய மனிதர்களுக்குக் கீழே தொல் தமிழரின் ஆயுதமான வளரி ஏந்திய வீரன் ஒருவன் தனித்து நிற்பதுக் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை வண்ணத்தில் இடுப்பில் வாள் உறையுடன், கையில் வாள் ஏந்திய வீரர்களும், ஒரே தொடர் வரிசையில் செல்லும் வீரர்களும், குதிரையின் மேல் செல்லும் வீரன், சந்திரன், சூரியன், சூலாயுதம், ஊர்ந்து செல்லும் விலங்கு போன்ற உருவங்களும் அதில் வரையப்பட்டுள்ளன. மேலும் மங்கலான வெள்ளை வண்ணத்தில் விலங்கு, மனித உருவங்களும், சிவப்பு வண்ணத்தில் நீண்ட கோட்டுருவங்களும் அழிந்த நிலையில் இருப்பது அறியப்படுகிறது.

இதுகுறித்து வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழகத்தின் நிறுவனர் பாவெல் பாரதி கூறுகையில், இதுவரை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாறை ஓவியங்களில் வில் அம்பு, வால், வேள், தடி ஏந்திய வீரர்களின் உருவமே பரவலாகக் கிடைத்துள்ளன. வளரி ஆயுதம் கிடைத்ததாகத் தெரியவில்லை. அந்த வகையில் வளரி என்று தெளிவாகத் தெரியும் பாறை ஓவியம் இதுவே.
இது தென் தமிழ்நாட்டிலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகளிடமும் வழக்கத்தில் இருந்த பழமையான ஆயுதமாகும். இதனை ஆஸ்திரேலியாவில் பூமராங் என்று அழைப்பர். தமிழ்நாட்டில் இன்றைய தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இவ் ஆயுதம் 1801 வரை வழக்கத்தில் இருந்தது. இவ்வாயுதங்களைப் பயன்படுத்தி நவாப்புளையும், ஆங்கிலேயர்களையும் அப்பகுதி வீரர்கள் தாக்கியது குறித்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்கள் பதிவு செய்துள்ளன.


1802ஆம் ஆண்டு முதல் வளரி ஆயுதம் பயன்படுத்துவது ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது. தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள கருமாத்தூர் அருகே கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கோவிலில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.


எதிரியை நோக்கி வீசப்பட்ட வளரி இலக்கை அடைந்து மீண்டும் எறிந்தவரின் கையிக்கே மீண்டும் திரும்பும்படி வடிவமைக்கப்பட்ட தனித்துவமான ஆயுதம் தான் இந்த வளரியின் சிறப்பம்சமாகும்.
இது பெரும் எண்ணிக்கையிலான எதிரிப் படைகளை ஒரு சில, சில வீரர்கள் மட்டும் மறைந்து நின்று தாக்கி வெல்லும் போர் முறைக்கும், வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி தாலுகாவில் இந்தியாவிலேயே பழமையான “ஆகோள் பூசல்” கல்வெட்டு கிடைத்த புல்லிமான் என்ற வேளிர் வாழ்ந்த புள்ளிமான் கோம்பை கிராமத்திற்கு அருகே உள்ள மூணாண்டிபட்டியில் பெருங்கற்காலச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் பாறை ஓவியங்களில் வளரி ஏந்திய மனிதன் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


பழந்தமிழர் பயன்படுத்திய வளரி என்ற ஆயுதம் பாறை ஓவியங்களில் கிடைத்திருப்பது புதிய ஆய்வுகளுக்குத் துணை செய்யும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *