அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் கடந்த மாதம் 27ஆம் தேதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவை கொடுத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இந்த காற்றழுத்த மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து வலு இழந்தது. இதனால் சென்னையில் 500க்கும் மேற்பட்ட இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின. தற்போது தான் இயல்பு நிலை சென்னையில் திரும்ப ஆரம்பித்துள்ளது. எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை கொட்டி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அது உருவாகும் என்றும் அறிவித்துள்ளது.
அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வால் கேரளா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு பக்கம் வங்கக்கடலிலும், மற்றொரு பக்கம் அரபிக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இடைப்பட்ட பகுதியில் தமிழகம் அமைந்துள்ளது. எனவே இரு காற்றழுத்து தாழ்வு நிலைகளும் தமிழகத்தில் மீண்டும் அதிக மழை கொட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளன.