தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் மார்க்கண்டன் தலைமை தாங்கினார் .ஒன்றிய செயலாளர் விஜய குமரேசன், பொருளாளர் லட்சுமி பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் குமரேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மோட்டார் இயக்குபவர்களின் ஊதியத்தை காலமுறை ஊதியமாக வழங்க வேண்டும் என்றும், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் ,தூய்மை காவலர்களுக்கு ரூபாய் 10 ஆயிரமாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் .வட்டார, மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் பதவி மற்றும் ஊதியம் வழங்க வேண்டும்.
10 ஆண்டு காலம் பணி முடித்த கணினி உதவியாளர்கைளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். கொரோனா தடுப்பு காலத்தில் உயிர் நீத்த பணியாளர்களுக்கு குடும்ப நல நிதியாக 25 லட்சம் வழங்க வேண்டும் ,உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள், கணினி உதவியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜோதிபாசு நன்றி கூறினார்.