கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் தகுதி பெற்றுள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குக்கு ரூ.1,000 உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. முன்னதாக ரூ.1 அனுப்பி உறுதி செய்யப்பட்ட பின்னர், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் 14-ம் தேதி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ரூ.1,000 செலுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இ சேவை மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து. தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு உறுதி அளித்திருந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 56.5 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்த இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து, என்ன காரணத்துக்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்று அரசு அறிவித்திருந்தது.