மஞ்சள் ஸ்கிரீன்ஸ் சார்பில் த.சுபாஷ் சந்திரபோஸ், கே.மகேந்திரன், என்.மகேந்திரன், சி.பரமசிவம்,ஜி.ராமு, சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து தயாரித்து
சோலை ஆறுமுகம் இயக்கி ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம்
“காடு வெட்டி”
இத் திரைப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன்,சுபாஷ் சந்திரபோஸ்,ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நகரத்தில் வசிக்கும் படித்த பெண்ணான சங்கீர்த்தனா விபின் நல்ல வேலையில் இருக்கும் இளைஞனுமான அகிலனும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலை புரிந்து கொண்ட பெற்றோர்கள் இருவரும் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கிராமத்தில் தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சார்ந்த இளைஞனை காதலித்துவிட்டதால், அவளை ஊர் வழக்கப்படி கௌரவ கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்து வற்புறுத்துகிறது.
சாமிப்புள்ள என்ற பின்னணி கோஷத்தோடு வலம் வரும் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா…” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார்,ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார்,காதல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை வெட்டச் சொல்லி பெண்களிடம் அருவாள் கொடுக்கிறார், அரசியல் தலைவருடன் இணைந்து போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார், அவ்வபோது சிறைக்கு செல்கிறார், திரும்பி வந்து கொலைகள் செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு செல்கிறார்.
பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு பெற்ற மகளை சுப்பிரமணிய சிவா கொலை செய்தாரா?, “பெண்ணை தொட்டா வருவேன்…”என்று சொல்லும் ஆர்.கே.சுரேஷ், இந்த பெண் விஷயத்தில் என்ன செய்தார்? என்பது தான் ‘காடுவெட்டி’ படத்தின் மீதிக்கதை.
ஒரு காதல் ஜோடிக்கு நகரத்தில் கிடைக்கும் சந்தோஷம் கிராமத்தில் கிடைக்கும் வேதனை என இரண்டையும் திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் சோலை ஆறுமுகம்.
தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதி பெருமை பேசும் ஊர் மக்களால், தான் பெற்ற மகளை கொலை செய்ய தன் மகளுக்கு பிடித்த கோழிக்கறியில் விஷம் கலந்து தன் மகளுக்கு சாப்பிட கொடுக்கும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வணக்கம் தமிழா சாதிக்கின் பாடல்கள் பார்வையாளர்களை உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது.
ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். கிராமச் சூழலைத் அழகாக படம் பிடித்து திரையில் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் புகழேந்தி. மொத்தத்தில் “காடுவெட்டி”ஜாதி அரசியல் கலந்த படம்.