நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கொரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 25-ம் தேதி அறிவித்தார்.
இதற்கான முன்பதிவு ஜனவரி 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு கோவின் இணையதளத்தில் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில், “சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது மேற்பட்டவர்கள் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.” இந்தியாவில் கோவேக்ஸின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.