கோவை அடுத்த அரசூர் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தறி ஓட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவருடைய மனைவி தாமரை.

ரங்கசாமியும், கோவிந்தராஜ் உறவினர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ரங்கசாமி திடீரென தாமரையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. உடனே தாமரை கூச்சல் போட்டதும், ரங்கசாமி தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தாமரை கணவரிடம் கூறினார். பின்னர் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ரங்கசாமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவம் பற்றி சித்ராவிடம் கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரங்கசாமி அவரது வீட்டிற்கு சென்று உள்ளார்.

அப்பொழுது ரங்கசாமி, கோவிந்தராஜ் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ் அங்கு இருந்த மரக்கட்டையை எடுத்து ரங்கசாமியின் தலையில் தாக்கினார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜ், தாமரை ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கோவிந்தராஜ் அவரது மனைவி தாமரை ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு கூறினார்.







