கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் மையை கொண்டு கையில் அச்சு வைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கைஅச்சை பதிந்து முதல் உறுதிமொழியை பதிவு செய்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதே எங்களின் முக்கிய இலக்கு. போதைப் பொருட்களுக்கு எதிராக சுதந்திரமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மாணவர்கள் மத்தியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த உள்ளோம்” என்றார்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் சூழல் உருவாகியுள்ளதால், அந்த சங்கிலியை முழுமையாக உடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டிற்குள் எந்த வழியிலும் போதைப் பொருட்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.




