ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை அடுத்து 2 நாட்களுக்கு பிறகு ஒடிசா மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விபத்து நடைபெற்ற பகுதி வழியாக முதல் ரயிலாக கோரமண்டல் விரைவு ரயில் இன்று காலை 10:45 மணிக்கு இயக்கப்பட்டது.
சென்னையில் இருந்து ஷாலிமருக்கு வழக்கமாக காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் ரயில் இன்று 3 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்த ரயில் விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாக ஆந்திராவை கடந்து ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் பதராக் ஆகிய பகுதிகளின் வழியாக விபத்து நடைபெற்று இருப்புப் பாதை சீரமைக்கப்பட்ட பாலசோர் பகுதியை கடந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தை நாளை சென்றடைய உள்ளது.