சிவகங்கை கண்டாங்கிபட்டி அருகே இயங்கி வரும் மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் 8ஆவது ஆண்டு விழா (புகழ் – 2024) நேற்றைய தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்பள்ளி தமிழகத்திலேயே முதல் புத்தகமில்லா CBSE பள்ளி எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்ற பள்ளியாகும். இதில் சிறப்பு விருந்தினர்களாக
சென்னை ஆர்வம் IAS அகாடமியின் நிறுவனர், கல்வியாளர், திரு.சிபிகுமரன்,
பேராவூரணி மெகா பவுண்டேஷன் நிறுவனர், ஏரி மனிதர், திரு.நிமல் ராகவன், மற்றும் திருப்பூர் அக்ஷயா அறக்கட்டளையின் பொருளாளர் சமூக ஆர்வலர், திரு.முருகன், ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினர். இவ்விழாவிற்கு ஶ்ரீமீனாக்ஷி கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர். பால. கார்த்திகேயன் தலைமை ஏற்றார். ஏழாம் வகுப்பு மாணவி இனியா வரவேற்புரை நல்கினார்.
விழாவின் முதல் நிகழ்வாக ஆண்டறிக்கை, பள்ளியின் கல்வித்திட்ட தலைவர் திரு.பாலமுருகன் அவர்களால் பெற்றோர்களின் முன்னிலையில் சமர்ப்பிக்கபட்டது. மாணவர்கள் அனைவருக்கும் மதுரை டான்ஸ் வேர்ல்ட் எனும் நிறுவனத்தினரால் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வருடம் முழுவதும் 95% க்கும் மேலான மதிப்பெண்கள் பெற்று, பள்ளியின் 100% கல்விக் கட்டணச் சலுகை தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்ற மாணவர்கள் மற்றும் ஒலிம்பியாட் போட்டித் தேர்வுக்கான சிறப்பு பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்கள் மற்றும் மாவட்ட, மாநில மற்றும் சர்வேதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளியின் விளையாட்டு கல்விக் கட்டணச் சலுகை பெறத் தகுதி பெற்ற மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவச் செல்வங்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்து மகிழ்ந்தனர்.
விழாவில் வகுப்பு வாரியாக அனைத்து மாணவர்களும் நடனம், நாட்டியம், நாடகம் மற்றும் இசை வாயிலாக தங்களது கலைத்திறமைகளை வெளிக்காட்டினர். புத்தகமில்லாப் பள்ளி – Book Free School எனும் புதியவகை கற்றல் கற்பித்தல் உத்தியை பெற்றோர்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி மாணவர்கள் நாடகம் நிகழ்த்தியது அனைவர்களின் வாழ்த்துகளையும் பாராட்டையும் பெற்றது.
மேலும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்களின் பத்து அவதாரங்களையும் வரிசைப்படுத்தி நடனம் நிகழ்த்தியது காண்போரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பஞ்சுருளி, குலிகா மற்றும் காந்தாராவை தத்ரூபமாக காட்டிய நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்திய UV நடனம் காண்போரை கவரும் விதத்தில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நன்றியுரை வழங்கினர்.
விழாவில் எண்ணற்ற பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். விழாவினை கலைத்திட்ட இயக்குனர் திருமதி. கங்கா கார்த்திகேயன், மேலாளர்.திரு.தியாகராஜன், பள்ளி ஆசிரியர்கள் திருமதி.அகிலாண்டேஸ்வரி, திருமதி.துர்கா தேவி, திருமதி.ஆனந்தி, திருமதி.ஜெயலட்சுமி, திரு.தனபாலன் மற்றும் திரு.சங்கர் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியரல்லாப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.