• Tue. May 7th, 2024

பழங்குடியினர் சாதி சான்றிதழ்களை வழங்கினார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்

ByKalamegam Viswanathan

Jul 18, 2023

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நரிக்குறவர் இனமக்களுக்கு பழங்குடியினர் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி, ப சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை) மற்றும் எஸ்.மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில் வழங்கி தெரிவிக்கையில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் வழியில், சிறப்பாக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக, பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்களை மேம்படுத்திட வேண்டும் என்ற அடிப்படையில், இலக்கு நிர்ணயித்து, அவ்இலக்கினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அதில், குறிப்பாக நரிக்குறவர் இன மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் நலன் காத்து வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , நரிக்குறவர்கள் என்று அழைக்கப்பட்டதை நெரிக்குறவர்கள் என்று அழைத்து அவர்களுக்கு சான்றும் தந்தவராவார்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் , நரிக்குறவர் இன மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடும் பொருட்டு, விரும்புகின்ற தொழிலை தொடங்கி பயன்பெறுவதற்கு ஏதுவாக, வங்கிக்கடனுதவிகள் வழங்கிடவும் வழிவகை ஏற்படுத்தி, அவர்களுக்கு தேவையான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், நரிக்குறவர் இன மக்கள் வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது, அவர்களின் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பதற்கு ஏதுவாகவும், குறிப்பாக அழியா செல்வமான கல்வியை பெறுவதற்கும் உண்டு உறைவிடப் பள்ளியை ஏற்படுத்தி, அதன்மூலமும் அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரிக்குறவர் இனமக்களின் 50 ஆண்டுகாள கோரிக்கையினை நிறைவேற்றிடும் பொருட்டு அவர்கள் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவிலிருந்து, கூடுதல் சலுகைகளை பெற்று பயன்பெறும் வகையிலும்,  தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பிற்கு செயல்வடிவம் கொடுக்கின்ற வகையிலும் தற்போது பழங்குடியினர் சான்று தங்களுக்கு வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட வாணியங்குடி ஊராட்சி பகுதியிலுள்ள பையூர் பிள்ளைவயல் நரிக்குறவர் காலணியில் வசித்து வரும் 176 குடும்பங்களை சார்ந்த 104 நபர்களுக்கு பழங்குடியினர் சான்று இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவதற்கென, தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசு, தனிகவனம் செலுத்தி சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டு, திட்டங்களின் பயன்களை நிரம்பப்பெற்று பயன்பெற வேண்டும் என,கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார்.
  
இந்நிகழ்ச்சியில்,மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன்,மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அ.சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாமேரி, நகர்மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் எஸ்.புவனேஸ்வரி (வாணியங்குடி), மணிமுத்து (காஞ்சிரங்கால்), சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *