• Fri. Apr 19th, 2024

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. சம்பவ இடத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்..!

Byவிஷா

Dec 8, 2021

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் நேரில் விவரம் அறிய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைகிறார்.


முன்னதாக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொலைபேசி வாயிலாக தகவல் கேட்டறிந்த நிலையில் அவர் கேவை செல்ல இருக்கிறார். இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஆனால் அதிகாரப்பூர்வமாக இது உறுதியாகவில்லை. அதே நேரத்தில் அவருடன் பயணித்த அவரது மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுவரை அந்த விமானத்தில் பயணித்த 14 பேரில் 7 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.


விபத்துக்குள்ளான இடத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ அதிகாரிகளின் உடல் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்து கொண்டிருந்த போது மலையின் முகட்டில் திடீரென ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு ஹெலிகாப்டர் சென்ற போது இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை அடுத்து விமான விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாகவும், நீலகிரி மாவட்டத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் நேரில் விவரம் அறிய முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு கோவை விரைவதாகவும், தமிழக சுகாதாரத் துறையின் சார்பில் மருத்துவக் குழு கோவைக்கு விரைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *