கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பரபரப்பான விவாத பொருளாக மாறியுள்ளது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மாணவிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கலபுரகியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஷ் பாத்திமா எம்எல்ஏ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நான், ஹிஜாப் அணிந்து சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வேன். தைரியம் இருந்தால் என்னை யாராவது தடுக்கட்டும் பார்க்கலாம்” என்றார்.கர்நாடகா ஐகோர்ட், மாணவர்கள் யாரும் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டம் நேற்று கூடியது. இதில் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கனீஷ் பாத்திமா ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அவர் சபை முடியும் வரை கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டத்திற்கு காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ஹிஜாப் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.