சர்ச்சையான கருத்துகளால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் பாடகி சின்மயி, தற்போது இசைஞானி இளையராஜா குறித்து சர்ச்சையைக் கிளப்பும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 5 ஸ்டார், பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், ஜீவன் நடித்த திருட்டுபயலே, விக்ரம் நடிப்பில் வெளியான ‘கந்தசாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி கணேசன். இவர் இயக்கத்தில் கடைசியாக ‘திருட்டுப்பயலே 2’ படம் வெளியாகியது. இதனை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார் சுசி கணேசன்இதையடுத்து தற்போது மீண்டும் தமிழில் படம் இயக்குகிறார்.
இதற்கு ’வஞ்சம் தீர்த்தாயடா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 80-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இப்படம் உருவாகவிருக்கிறது. வஞ்சம் தீர்த்தாயடா படத்தை 4வி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதோடு இளையராஜா இப்படத்துக்கு இசையமைப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்நிலையில் சுசி கணேசன் படத்துக்கு இளையராஜா இசையமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “வஞ்சம் தீர்த்தயாடா. வாவ்… இந்த இயக்குனர் லீனாவிடம் அதிகமாக அதைத்தான் செய்து வருகிறார். ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவுக்கு தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் லீனா மணிமேகலை சுசி கணேசன் மீது மீடூ புகார் எழுப்பியிருந்தார். அதைக் குறிப்பிட்டு சின்மயி வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.