பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக எஸ்.பி. ஸ்ரீநாதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா கூறுகையில், “பேருந்துகளின் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதும், ரகளையில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது. படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பேருந்தில் பயணம் செய்வது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மாணவர்களின் நலன் கருதி அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். படிக்கட்டில் பயணம் மேற்கொள்ளும் செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், மாணவரின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.