


இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் நடத்தும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து, இந்திய ராணுவம் நடத்தும் பதிலடிக்கு ஆதரவாக தமிழக முதல்வர் நடத்த இருக்கும் பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற பேட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ராம்கோ மில் விருந்தினர் மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
“காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வருகிறது. இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க நிர்பந்தத்தின் பேரில் 7ம் தேதி அதிகாலை மிகவும் துல்லியமாக தீவிரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவத்தினர் அழித்து மக்களை பாதுகாத்து வருகிறது. இது 30 நிமிடத்தில் இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு போர் தாக்குதலை துவங்கியுள்ளது. இந்திய எல்லையில் உள்ள பல்வேறு நகரங்களை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தி ஏவுகணை தாக்குதல் நடத்தியதை இந்தியா வெற்றிகரமாக அதை முறியடித்து மக்களை பாதுகாத்து வருகிறது. ஐநா சபை உள்பட அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக பேசி வருகிறது. ஐநா சபையோ போர் வேண்டாம் அமைதியை நிலை நாட்டுங்கள் என கூறி வருகிறது. அமைதியை நிலை நாட்ட வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தான் கையில் தான் இருக்கிறது. இரண்டு முறை ஒன்றிய அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தியுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரிய விளக்கம் அளித்திருக்கலாம். கலந்து கொள்ளவில்லை. இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களும் தேச பக்தர்கள் தான். இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு முதல்வர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளார். இந்த பேரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து முழுமையான அளவு பங்கேற்போம் ஒன்றிய அரசு பிரதமராக மோடி வந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளாக தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. 16 ஆயிரம் கோடி ரூபாய் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மனம் வராமல் கெடுபிடி வசூல் செய்து வருகிறது. மாணவர்களின் கல்விக் கடன்களை கெடுபிடி வசூல் செய்து வருகிறது. மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் வருகின்ற 20ஆம் தேதி பொது வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளோம்.
ரஷ்யா கச்சா எண்ணெய் விலைகளை கடந்த இரண்டு ஆண்டு காலமாக மிகவும் குறைத்து விலை குறைப்பை அறிவித்துள்ளன. ஆனால் இங்கு எண்ணெய் நிறுவனங்களோ, ஒன்றிய அரசோ பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க முன்வரவில்லை. தொடர்ந்து ஒரே நிலையில் இருந்து வருகிறது. அது தவிர சுங்க கட்டண வசூல் மையங்கள் காலாவதி ஆகியும் அவை இன்னும் வரி வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவைகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் போட்டி அரசாங்கம் நடத்தும் வகையில் ஆளுநர்களை நியமனம் செய்து போட்டி அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் பல்வேறு மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்ததை உச்சநீதிமன்ற மூலம் தமிழக முதல்வர் தீர்வு கண்டு தற்போது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வைத்து தமிழக மட்டுமின்றி இந்தியாவிற்கு இந்த தீர்ப்பு ஒரு முன்மாதிரியாக இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வர் சிறந்த முறையில் இந்த தீர்ப்பை பெற்றுக் கொடுத்தமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. மேலும் இதர கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம். பல்வேறு நிலைகளில் தமிழ்நாடு அரசு போராடிப் பெற்ற பல்வேறு திட்டங்களை தான்தான் கொண்டு வந்தேன் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து வருகிறார். மேலும் தற்போது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையும் தான்தான் போராடி பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி வருவது வருந்தத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வு, வக்ப் பிரச்சினை, தேசிய கல்விக் கொள்கை, மேலும் ரூ.8512 கோடி கல்வி நிதி போன்றவைகளையும் கேட்டு பெற்று கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம்” இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உடன் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொ. லிங்கம், மாநில குழு உறுப்பினர் தி. ராமசாமி, மாவட்ட குழு உறுப்பினர் வி. ரவி, நகரச் செயலாளர் விஜயன் உள்பட பலர் இருந்தனர்.

