• Fri. Apr 19th, 2024

கூடலூரில் சாலையோர தடுப்பு சுவரில் மோதி கல்லூரி மாணவர் பலி!

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட 3 டிவிஷன் பகுதியைச் சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகன் அஜ்மல் (வயது 19). இவர் கூடலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனால் தினமும் காலையில் தனது மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்று வந்தார்.
அதன்படி அவர் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம்போல் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் கூடலூர் 2-ம் மைல் மீனாட்சி பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜ்மலுக்கு தலை உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காகக் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்ம் மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அஜ்மல் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற அஜ்மல் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தும் அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகப் போலீசார் தெரிவித்தனர். இதனிடையே கல்லூரி மாணவர் உயிரிழந்த தகவல் கேட்டுப் பெற்றோர் உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *