சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் 2 வெண்கலப்பதக்கம் வென்று கோவை வந்த வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 வீரர், வீராங்கனைகள் தடகளப்போட்டியிலும், இறகு பந்து போட்டியில் 6 பேரும், வாள் வீச்சு போட்டியில் ஒரு வீராங்கனையும் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டு வீரர்கள் 2 தங்கம், ஒரு வெள்ளி, 10 வெண்கலப்பதக்கம் வென்றனர். இவர்களில் கோவை மாவட்டத்தை சேர்ந்த வீல் சேர் பாரா தடகள வீரர் முத்துராஜ்(33) குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் நேற்று கோவை திரும்பினார். அவரை கோவை மாவட்ட பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்க தலைவர் ஷர்மிளா ராம் ஆனந்த், துணை தலைவர் கார்த்திக், மண்டல இயக்குனர் ராம் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், வீரர், வீராங்கனைகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் முத்துராஜ் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து நிருபர்களிடம் முத்து ராஜ் கூறியதாவது,
சீனாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதலில் 2 வெண்கலப்பதக்கம் பெற்றேன். தமிழ்நாடு அரசு சார்பில் எனக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ரூ. 40 லட்சம் பரிசு தொகை கொடுத்துள்ளனர். இது எனக்கு அடுத்த கட்டமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு ஊக்கமாக இருகும். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கும் எனது நன்றி. இந்த முறை நடைபெற்ற போட்டியில் நூழிலையில்தான் தங்க பதக்கத்தை தவற விட்டேன். அடுத்த முறை நடைபெறும் போட்டியில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. கோவை மாவட்டத்தில் பாரா விளையாட்டு வீரர்களுக்கு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.