• Fri. Apr 26th, 2024

புதிய தேசிய கட்சியை அறிவிக்கிறார் சந்திரசேகரராவ்…

Byகாயத்ரி

Oct 4, 2022

தெலுங்கானா மாநிலத்தில், ‘தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி’ கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தான் பிரதமராக வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களுக்கு சென்று அந்தந்த மாநில முதல்வர்களை சந்தித்து, தனது ஆதரவாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவுகளை திரட்டி வந்தார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து மீண்டும் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறார். இந்த முறை தனது தலைமையின் கீழ் இந்த கூட்டணியை அமைக்க முடிவு எடுத்து உள்ளார் சந்திரசேகரராவ். இதற்காக தனது கட்சிக்கு இருக்கும் மாநில அந்தஸ்தை தேசிய அந்தஸ்தாக மாற்ற முயன்று வருகிறார். தேசிய கட்சியை தொடங்கி தனது தலைமையின் கீழ் பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்.இதற்காக சில மாதங்களுக்கு முன்பாகவே பீகார் முதல்வர் நித்திஷ் குமார், சிவசேனா கட்சி உத்தரவு தாக்கரே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே தேசிய கட்சியை தொடங்கி அணியை ஏற்படுத்திவிட முடிவு செய்துள்ள சந்திரசேகரராவ், தனது மாநில கட்சியை ‘பாரத் ராஷ்ட்ர சமிதி என்கிற பெயரில் தேசிய கட்சியாக தொடங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். நாளை அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா பண்டிகை என்பதால் இந்த பண்டிகையை முன்னிட்டு புதிய தேசிய கட்சி குறித்து அறிவிப்பை சந்திரசேகரராவ் வெளியிடுகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இன்னும் இரண்டு வார காலத்திற்குள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவையும் கூட்டி முடிவு எடுக்க இருக்கிறார் என்றும் தகவல் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *