தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 8:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 470 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். இதன் பிறகு மேலும் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து 26-ம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
