விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சிஐடியூ உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் உசிலம்பட்டி முருகன் கோவிலிலிருந்து ஊர்வலமாக உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கி முன்பு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையிலான போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.