• Sat. Apr 20th, 2024

இந்தியாவை 3ஆக பிரிக்க மத்திய அரசு முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ByA.Tamilselvan

Oct 18, 2022

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து சட்டசபையில் இன்று அரசின் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானம் குறித்து அவர் பேசியதாவது:- மத்திய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்ற குழுத் தலைவராகவும் உள்ள அமித்ஷா தலைமையிலான குழு சமீபத்தில் ஜனாதிபதியிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.
அந்த பரிந்துரைகளில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்க ளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்தியின் அடிப்படையில் நாட்டை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இப்படி ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக்கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்க கூடாது. நடைமுறைப்படுத்த கூடாது என பிரதமருக்கு கடந்த 16-ந்தேதி அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இந்த மாபெரும் அவையில் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழிபயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது. அன்னைத் தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழு தலைவரால் கடந்த 9.9.2022 அன்று ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டு உள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டு உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை இந்த பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன்பிறகு இந்தி திணிப்புக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *