• Tue. Feb 18th, 2025

முதல்வர் ஸ்டாலினை முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட செல்லூர் ராஜூ

Byகுமார்

Sep 30, 2021

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனுவை இன்று அளித்தார்.

அதன் பின்னர் மாநகராட்சி வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 மாதங்களில் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள், மேடு பள்ளமாக உள்ளது, அதனை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும் பாதாள சாக்கடை தண்ணீர், குடிநீரில் கலப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஆ.தி.மு.க ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை தற்போது ரத்து செய்து விட்டார்கள், அந்த டெண்டர்களில் எந்தவொரு முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே, அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அதே போல தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது’ என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.