அமீர்கானின் லகான் படத்திற்கு பிறகு எந்தவொரு இந்திய திரைப்படமும் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழ்ப்படமான ஜெய்பீம் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
94வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியல் (நாமினேஷன்) இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது! சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை உள்ளிட்ட 23 பிரிவுகளுக்கான விருதுகள் ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி 8ம் தேதியான இன்று அமெரிக்க நேரப்படி காலை 5.18 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. மார்ச் 27ம் தேதி விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.
செவ்வாய்க்கிழமையான இன்று மாலை 6.48 மணிக்கு டிரேசி எல்லிஸ் ராஸ் மற்றும் காமெடி நடிகர் லெஸ்லி ஜோர்டன் இணைந்து நாமினேஷன் பட்டியலை அறிவிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளனர். ஆஸ்கரின் அதிகாரப்பூர்வமான வெப்சைட்டுகள் மற்றும் சமூக வலைதளங்களான பேஸ்புக், யூடியூப் மற்றும் ட்விட்டர் உள்ளிட்டவற்றில் நேரலையாக இந்த அறிவிப்பு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் சிறந்த படத்திற்கான பிரிவில் தேர்வாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராட்டன் டொமேட்டோஸின் எடிட்டர் ஜாக்குலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறந்த படம் ஜெய்பீம் என்றே குறிப்பிட்டுள்ளார். தனக்கு அந்த படம் மிகவும் பிடித்த படம் என்பதால், நிச்சயம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவரது ட்வீட் நம்பிக்கையை அளித்துள்ளது.
ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் வெளியானதில் இருந்தே ஆஸ்கர் குழுவுக்கு மிகவும் பிடித்துப் போன படமாக சூர்யாவின் ஜெய்பீம் இருப்பது வெளிச்சமாகி உள்ளது. இந்நிலையில், இன்று மாலை வெளியாகப் போகும் அந்த அறிவிப்புக்காக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.