நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளன. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது.
இதையடுத்து சென்னையில் செய்தியாளர்கைள சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கடந்த 9 மாத நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்றிதழே இந்த வெற்றியாக கருதுகிறேன். இந்த வெற்றி என்பது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம்.
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தையே திமுக கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. பொறுப்பு அதிகரித்திருக்கிறது. திமுகவினர் இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல் அமைதியாக கொண்டாட வேண்டும். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை 100 சதவீதம் பாதுகாக்க வேண்டும். மக்களுக்காக உழைக்க வேண்டும். திமுகவினர் எந்தப்புகாரும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புகார் வந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகள் முழுமையாக எண்ணப்பட்ட பிறகு மாநகராட்சி மேயர் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.