வீட்டின் காம்பவுண்ட் கேட்டிற்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு பொருளைத் தேடிய காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் மாங்கரை கணுவாய் தாலியூர் பன்னிமடை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது.
அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் தடாகம் அடுத்த தாலியூர் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை ஒன்று பழனிசாமி நாயக்கர் என்பவரது தோட்டத்தில் இருந்த வாழை மரங்களை தின்று சேதப்படுத்திச் சென்றுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் ஒருவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் கேட்டுக்குள் தும்பிக்கையை நுழைத்து உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என தேடிச்சென்றுள்ளது.

தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகளும் வாழை மரங்களை சேதப்படுத்திய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் வனத்துறையினர் காட்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் இரவு நேர ரோந்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என விவசாயிகளும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.