9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது. தி.மு.க பல்வேறு இடங்களில் அமோக வெற்றியும், பல்வேறு இடங்களில் தொடந்து முன்னிலை பெற்றும் வருகிறது.
வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு காமெடிகளும் நடைபெற்று வந்துள்ளன. ஓட்டு பெட்டியில் வாக்காளர் அடையாள அட்டைகளை போடுதல், பூத் ஸ்லிப்யை போடுதல் என பல நிகழ்வுகள் நடந்துள்ளது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு வாக்குச்சீட்டை பார்த்த வாக்கு எண்ணும் முகவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அந்த வாக்குச்சீட்டில், ‘எந்த வேட்பாளரும் ரூ.500 பணம் தராததால் வாக்களிக்க விரும்பவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வாக்குச்சீட்டில் வாக்காளர்கள் எழுதியதால் அவர் செலுத்திய வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளது.