தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய அமைச்சர்கள், சட்டமுன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், என அனைத்து தரப்பினரின் வாகனங்களையும், வேட்பாளர்களின் வாகனங்களையும் சோதனையிடுவது போன்ற வேலைகளில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை பா.ஜ.க. வேட்பாளர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபி அருகே கெட்டி செவியூர் குறிச்சி பிரிவில் ஈரோடு – திருப்பூர் மாவட்ட எல்லையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த திருப்பூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்த்தின் வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தியுள்ளனர்.
காரை ஓரமாக நிறுத்தாமல் சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதோடு சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 'எங்களை மிரட்ட சொன்னார்களா?' என பேச தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ''சவுண்ட் எல்லாம் விடாதீங்க என்று கண்காணிப்பு நிலைக்குழுவை சேர்ந்த அலுவலர் முருகேசனின் அடையாள அட்டையை காண்பிக்குமாறும், மற்ற காவலர்களையும் மிரட்டினார். ஒருமையில் பேசியது மட்டுமில்லாமல், கைவிரலை நீட்டி அதிகாரிகளை பார்த்து ஆணையிட்டு பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டியுள்ளார். அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாள் முழுவதும் வழக்குபோட்டு நீதிமன்றத்துக்கு அலைய விட்டுவிடுவேன் என பா.ஜ.க. வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் எச்சரிக்கை விடுத்தனர். இவரின் இத்தகைய செயலைக்கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை மிரட்டும் வகையில், பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது பாஜக வேட்பாளர் முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.