• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கார் போர் அடிக்குது : பஸ்ஸில் சென்ற சிறுவன் பத்திரமாக மீட்பு

Byவிஷா

Apr 16, 2024

கோவையில் இருந்து தருமபுரிக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக, காரில் சென்ற சிறுவன், காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அந்தச் சிறுவன் காவல்துறையினரின் துரித நடவடிக்கையில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு, (வயது 40). கோவை தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை தனது குடும்பத்துடன் தருமபுரி பென்னாகரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்துக்கு காரில் வந்துள்ளனர். தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்த போது, தனது மகன் பிரித்திவி, (5). காரிலிருந்து இறங்கியது அவர்களுக்கு தெரியவில்லை.
சிறிது நேரத்தில் மகனை காணவில்லை என தேடியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினரின் உதவியை நாடிய நிலையில், தருமபுரி காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, சிறுவன் சேலம் செல்லக்கூடிய தனியார் பேருந்தில் ஏறியதை கண்டுபிடித்தனர். பின்னர் உடனடியாக அங்கிருந்து சேலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தருமபுரி காவல் துறையினர், சிறுவன் குறித்த தகவலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி பகல் 1.15 மணிக்கு ஓமலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அந்த பேருந்தில் இருந்த சிறுவனை ஓமலூர் காவல் துறையினர் மீட்டு, ஓமலூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். பின் அங்கு வந்த தருமபுரி காவல் துறையினரிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். துரிதமாக செயல்பட்ட காவல் துறையினருக்கு பெற்றோர் மனமாற நன்றி தெரிவித்தனர்.