சபரி மலைகோயிலுக்குள் சினிமா போஸ்டர் எடுத்துவருவது, மற்றும் இசைகருவிகள் இசைப்பதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3ஆவது முறையாக கைகோர்த்திருக்கும் துணிவு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. அதே போல் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் நாளை வெளியாக உள்ளது. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். பட நிறுவனங்கள் ஒருபுறம் இருக்க ரசிகர்களும் தங்கள் பங்குக்கு கட் அவுட் வைப்பது, பாலாபிகேஷம் செய்வது என புரமோஷன்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் சபரிமலை சென்ற விஜய், அஜித் பக்தர்கள் அங்கு வாரிசு மற்றும் துணிவு போஸ்டரை வெளியிட்டு படம் வெற்றிப்பெற பிரார்த்தனை செய்தனர். இதுதொடர்பான செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்துவருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு சபரிமலை தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கோவிலுக்குள் வரும் பக்தர்களுக்கு, வழிபாடு செய்ய உரிமை உள்ளது. ஆனால் அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.