நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் எஸ்.ஜெயக்குமார் இயக்கி வெளிவந்த திரைப்படம்”ப்ளூ ஸ்டார்”.
இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, கலையரசன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.அரக்கோணம் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித்(அசோக் செல்வன்) ராஜேஷ் (சாந்தனு) இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரிய ஆர்வம். இருவரும் தனித்தனி அணியின் கேப்டனாக இருக்கின்றனர்.
பல அணியுடன் இவர்கள் விளையாடினாலும் எந்த போட்டியிலும் ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. காரணம், ரஞ்சித்துக்கு முந்தைய தலைமுறையினரும் அந்த ஊரில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின் போது பெரிய அடிதடி நடந்ததால் இரு சமூகத்துக்கும் பெரும் பிரிவு ஏற்படுகிறது.
ரஞ்சித் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவரது அணியினரும் அதே காலனி என்பதால் எதிர்த் தரப்பில் இருக்கும் ராஜேஷ் மற்றும் அவரது அணியினர் ரஞ்சித்துடன் விளையாடுவதில்லை.
பல ஆண்டுகளாக இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் விளையாடுவதில்லை என்பதால் கோவில் திருவிழாவில் விளையாட முன் வருகிறார்கள். அந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார்.
போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர். மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு சொன்னபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவரைக் கடுமையாக அவமானப்படுத்தப்படுத்தி அனுப்புகிறார்கள்.
அதே நேரம் விளையாட்டு கோட்டாவில் அரசுப் பணிக்காக முயலும் ரஞ்சித்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புறக்கணிப்பைச் சந்திக்கிறார். ஒரு சூழ்நிலையில் ப்ளூஸ்டார் அணியும் ஆல்பா அணியும் ஓர் அணியாக மாறுகிறது.
இரு சமூகத்தைச் சேர்ந்த அணிகளும் ஒன்று சேர்ந்து எதிரணியை வென்றார்களா? என்பதை இப்படத்தின் கதை. கிரிக்கெட் போட்டிகளை வைத்தே சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.
அசோக் செல்வன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சாந்தனும் தனக்கு தரப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு சிறப்பாக நடித்துள்ளார்.
தமிழ் ஏ. அழகனின் ஒளிப்பதிவும் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில்”ப்ளூ ஸ்டார்!”சிக்ஸர்.