• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சாக்கடை கால்வாயில் அடைப்பு.., மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம்-நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு

ByP.Thangapandi

Aug 28, 2024

உசிலம்பட்டி அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட பகுதியை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்களே இறங்கி சரி செய்த விவகாரம் – நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி பொறியாளர் நேரில் ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் மதுரை ரோட்டில் உள்ள 5,6,7,8,9 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வார்டு பகுதியிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் கால்வாய் மூலம் கொங்கபட்டி ஊரணியில் சென்று தேங்கி வருகிறது.

முறையான வடிகால் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அவ்வப்போது கொங்கபட்டி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையோரம் ஆறாக ஓடும் சூழல் வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக வழக்கம் போல் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் ஆறாக செல்லும் நிலையில், நேற்று கொங்கபட்டி பல்க் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பை உரிய உபகரணங்கள் இன்றி மனிதர்கள் இறக்கி சாக்கடை கால்வாயில் இருந்த அடைப்பை சரி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன், நகராட்சி பொறியாளர் பட்டுராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நகராட்சி சேர்மன் சகுந்தலா கட்டபொம்மன், உசிலம்பட்டி பகுதியின் நீண்ட நாள் கோரிக்கை, நான்கு பகுதியிலிருந்தும் வெளியேறும் சாக்கடை நீரை ஓர் இடத்தில் சுத்திகரிப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்திற்கான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.