பாஜகவின் அடுத்த தலைவராக மாரிதாஸ்தான் என்றும், அவரை பாஜக தொண்டர்கள் கொண்டாடுவது தற்போதைய தலைவர் அண்ணாமலைக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றும் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மாரிதாஸ் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அதனால் அடிக்கடி சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை போட்டு மாட்டிக்கொண்டுவிடுவார். தமிழக சட்டசபை தேர்தலின் போது பாகிஸ்தானை ஆதரிக்கும் திமுகவைத் தடைசெய்ய வேண்டுமென பதிவு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான விவகாரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதன் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் சிறை சென்றார்.
இந்நிலையில் மாரிதாசின் கைது நடவடிக்கை பாஜக மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மிக வன்மையாக கண்டித்தார். இந்நிலையில் மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என, வழக்கை ரத்து செய்வதாகவும் நீதி மன்றம் தெரிவித்துள்ளது. இது பாஜக, மாரிதாஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகர்களில் ஒருவருமான சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
மாரிதாஸ் கைது விவகாரத்தில் அண்ணாமலை வேகமாக அறிக்கை வெளியிடுகிறார், ஆனால் பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் மாரிதாசை ஆதரிப்பதில் அண்ணாமலைக்கு கொஞ்சம்கூட விருப்பம் கிடையாது. தொண்டர்கள் முதல் ஊடகங்கள் வரை எல்லோரும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்தான் அண்ணாமலை, ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தற்போது மாரிதாஸ் உயர்ந்து கொண்டிருக்கிறார். பாஜக தொண்டர்கள் மொத்தமாக we Support Marodhas என்று பதிவிடுகிறார்கள். அண்ணாமலையை காட்டிலும் மாரிதாஸ் சிறப்பாக செயல்படுகிறார் என்பதால் மாரிதாஸ் பாஜகவின் மாநில தலைவராகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அண்ணாமலையுடன் மாரிதாசை ஒப்பிடும்பொழுது அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.