


புதுச்சேரியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பாஜக மாநில இளைஞரணி துணைத்தலைவரும், பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமா சங்கர் பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் எட்டு வழக்குகளில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை, வழக்குகளில் தொடர்புடையவர் கருவடிக்குப்பம் சேர்ந்த உமாசங்கர். லாஸ்பேட்டை காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் இருக்கும் இவர், புதுச்சேரி பா.ஜ.க-வின் மாநில இளைஞரணி துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக அவ்வப்போது தலைமுறைவாகவும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இவரை கொலை செய்வதற்காக சில மர்ம நபர்கள் பின் தொடர்ந்ததாக தெரிகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று லாட்டரி அதிபர் மார்ட்டின், மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாள் விழா புதுச்சேரி முழுவதும் மிகப் பிரமாண்ட அளவில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏற்பட்டில் முதல் நிகழ்ச்சியாக கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் இருந்து பிறந்தநாள் ஊர்வலம் தொடங்க இருந்தது. இதற்காக ஏற்பாடுகளை உமாசங்கர் இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாமிப்பிள்ளை தோட்டம் ஜிஞ்சர் ஹோட்டல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் சராமரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பித்து ஓடிவிட்டனர்.
இதில் முகம், கை,உடல் முழுவதும் வெட்டுப்பட்டு உடலின் பாகங்கள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அதற்க்குள் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்ட தெரிந்ததை அரிந்த அப்பகுதியில் இருக்கக்கூடிய உறவினர்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் பாஜக பிரமுகர்கள் உடல் கிடந்த இடத்தில் குவிந்ததால் பதட்டமான சூழல் நிலவியது.

பின்னர் காவல் துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தி பிரேதத்தை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் கருவடிக்குப்பம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் முன்விரோதம் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

