மகாராஷ்டிராவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் பாட்டீல். விலைவாசி உயர்வு குறித்துப் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி மக்களவை தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கபில் பாட்டீல். இவர் தற்போது மத்திய அமைச்சரவையில் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சராக உள்ளார்.
தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கபில் பாட்டீல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் அப்போது தான் காஷ்மீர் பிரச்சினைக்கு நமக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும். இதைக் காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் செய்ய முடியாது பிரதமர் மோடியால் மட்டுமே இதைச் செய்ய முடியும். இப்படி பெரிய பணிகள் நம் முன் இருக்கும் போது, நாம் வெங்காயம், உருளைக்கிழங்கு விலைகள் உயர்வது குறித்து யோசித்துக் கொண்டிருக்க முடியாது.
நாட்டில் உள்ள மக்கள் மட்டனை 700 ரூபாய்க்கும், பீட்சாவை 500-600 ரூபாய்க்கும் வாங்குகிறார்கள். ஆனால் வெங்காயத்தை 10 ரூபாய்க்கும், தக்காளியை 40 ரூபாய்க்கும் உயர்ந்தால் விலைவாசி உயர்ந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். விலைவாசி உயர்வு வேண்டும் என யாரும் கூற மாட்டார்கள். ஆனால் வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கறி விலைகளைக் குறைக்க நரேந்திர மோடி பிரதமராகவில்லை.
இந்த பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணத்தை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் பிரதமர் மோடியை ஒருபோதும் குறை சொல்ல மாட்டீர்கள். நாம் முதலில் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சரின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிகில் உள்ளது.