• Thu. Apr 25th, 2024

எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி:
அண்ணாமலை பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.
எம்.பி தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய மந்திரிகளும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்த தேர்தலை சந்திப்பதற்காக ஆயத்தப்பணிகளை தமிழக பா.ஜ.க. ஏற்கனவே தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் மதியம் 3 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் எம்.பி. ராமலிங்கம், வி.பி.துரைசாமி, துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர். எச்.ராஜா மட்டும் இடையிலே புறப்பட்டு சென்றுவிட்டார்.
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பரபரப்பு கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாக வெளியாகி உள்ள தகவல் வருமாறு:- எம்.பி. தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற வேண்டும். இதற்காக இன்று முதலே ஒவ்வொரு நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. பிளவுபட்டு இருக்கிறது. அக்கட்சி பிரச்சினை தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிசாமி வாழ்க…, ஓ.பன்னீர்செல்வம் வாழ்க…, என்று நாம் அவர்கள் பின்னால் செல்ல தேவையில்லை. அவசியமும் இல்லை. அவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி வைப்பதை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து களம் கண்டு கணிசமாக வாக்குகளை பெற்றது. அதேபோன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த 2 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய நிர்வாகிகள் அனைவரும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்கள். கூட்டணி குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *