• Mon. Apr 29th, 2024

பைக்கில் சென்ற பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை

ByKalamegam Viswanathan

Feb 15, 2024

மதுரையில் அதிகாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – பரபரப்பு – அண்ணாநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை. வாகனம் விற்பனை பிரச்சனை காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கீழ வல்லானந்தபுரம் பகுதியை சேர்ந்தவரான சக்திவேல் (35) இவர் மதுரை மாநகர் அண்ணாநகர் பகுதியில் தேவர் குறிஞ்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக OBC அணியின் மாவட்ட செயலாளராக பதவி வகித்துவருகிறார். மேலும் இவர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவேல் தனது வீட்டில் அருந்து வண்டியூர் டோல்கேட் அருகே சங்குநகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3க்கும் மேற்பட்டோர் பைக்கில் சென்ற சக்திவேலை விரட்டியுள்ளனர். அப்போது சக்திவேல் தப்பியோட முயன்ற நிலையில் அவரை விரட்டி மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அப்போது அவர் தப்பியோட முயன்ற நிலையிலும் விரட்டி விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடினர்.

இதையடுத்து அவரது உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் சக்திவேலின் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினர்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சக்திவேலுடன் ஒரு நபர் பிரச்சனையில் ஈடுபட்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் காவல்துறையினர் டோல்கேட் உள்ளிட்ட சம்பவம் நடைபெற்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறை பல்வேறு பகுதிகளில் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மதுரையில் அதிகாலையில் சாலையில் சென்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே சக்திவேலின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவித்துவைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *