மதுரையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகளை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். 5 அரசு துறைகளின் சார்பில் 201 பயனாளிகளுக்கு 21 இலட்சத்து 98 ஆயிரத்து 581 ரூபாய் மதிப்பில் முதியோர் உதவித் தொகை, நிவாரண நிதி, 3 சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “சமூக நீதி, சமத்துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் திமுக தொடங்கப்பட்டது. பின்தங்கிய மக்களை பொருளாதார மேம்பாடு அடைய செய்வதே தமிழக அரசின் இலக்கு. நலத்திட்டங்களில் தகுதியான ஒருவர் கூட விடுபட கூடாது என உழைத்து வருகிறோம். 2 மாதத்திற்கு முன் உயிரிழந்த 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது ஆய்வில் கண்டுபிடித்து, தகுதியான நபர்களுக்கு உதவித் தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ, அதை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
நகைக்கடன்கள், பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்த போது முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. நகைக்கடன், பயிர்க்கடன்களில் பல ஆயிரம் கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளது. கடன்களில் மனசாட்சிக்கு விரோதமாக முறைகேடுகள் நடந்துள்ளது. தகவல் அடிப்படையில் முறைகேடாக கடன்கள் வழங்கப்பட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது” என கூறினார்.