பாரம்பரியத்தைப் பறைசாற்றும் புடவையின் மகிமை:
நம் அழகை பேணி காப்பதில் ஆடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அதில் நமது பாரம்பரிய புடவையை பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆடை அவர்களை அழகுபடுத்தும்.
பொதுவாக ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக ஆடை அணியக்கூடாது. புடவை கட்டும்போது ரவிக்கையும் இறுக்கமாக இல்லாமல் சற்றுத் தொளதொளவென்று அணிய வேண்டும்.
பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடை அணிவது பருமனைக் குறைத்துக் காட்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு புடவை இளவண்ணமுடையதாக இருந்தால் ரவிக்கை சற்று அடர் வண்ணம் உடையதாக இருப்பது நல்லது.
புடவையின் வண்ணம் அடர்த்தியானதாக இருந்தால் ரவிக்கை மெல்லிய வண்ணத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். ஒரே நிறத்தில் புடவை ரவிக்கை என்று பார்த்து வாங்குவதை விட இவ்வாறு அணிவது அழகை மேம்படுத்திக் காட்டும்.
சாதாரணமாக ஷாப்பிங் போன்ற இடங்களுக்கு போகும்போது சிறிய பூக்கள் போட்ட இளம் வண்ணம் கொண்ட நைலான் புடவைகளையே பயன்படுத்துங்கள். கோவில் கடற்கரை போன்ற பொது இடங்களுக்குச் செல்லும்போது அடர்வண்ணம் கொண்ட காட்டன் புடவைகள் அழகை கூட்டும்.
உயரமாக உள்ள பெண்கள் தங்கள் உயரத்தைக் குறைத்துக் காட்ட குறுக்குக் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். குள்ளமான பெண்கள் உயரத்தைச் சற்று அதிகரித்துக் காட்ட நேர்வாக்கில் கோடு போட்ட புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.
புடவை கட்டும்போது பார்டர் ப்ளீட்ஸ் போன்றவை உடல்வாகுக்கு ஏற்றவாறு எடுத்து கொள்ள வேண்டும்.