தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் இங்கு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவிக்கான நீர்வரத்தைக் கண்காணிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்கள் அருவிக்குச் செல்லும் வழியில் யானைகள் கூட்டமாக நிற்பதைக் கண்டனர். அவை மரக்கிளைகளை முறித்துக் கொண்டிருந்தன. மேலும், பனிமூட்டமாக இருந்ததால் அவற்றின் எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் அவை குட்டிகளுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அருவிக்குச் செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக அலுவலர்கள் தடை விதித்தனர். யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் அனுமதி தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அருவியில் குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.