• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலாபிஷேகம்!

மதுரை மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த மருது சேனை கட்சியின் பிரமுகரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்ட ஆதிநாராயணனுக்கு அவரது ஆதரவாளர்கள் குடம் குடமாய் பாலாபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் மருது சேனை கட்சியும் போட்டியிட்டது. வேட்பாளராக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஆதிநாராயணன் போட்டியிட்டார். அதே தொகுதியில் போட்டியிட்ட தமிழக வருவாய்த் துறை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கடும் பரப்புரை மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் கொலை வழக்கு காரணமாக மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணன் அடைக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் ஆதிநாராயணனை முன்னிலைப்படுத்தி கலவரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட கொலை வழக்கில் ஆதி நாராயணனுக்கு பிணை கிடைத்த நிலையில், நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளாக திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர். அதுமட்டுமன்றி குடம் குடமாய் அவர் மீது பாலைக் கொட்டி அபிஷேகம் செய்தனர். மேலும் 50க்கும் மேற்பட்ட ஆளுயர மாலைகளை அனைத்து ஆதி நாராயணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.

மதுரை மத்திய சிறையில் இருந்து புறப்பட்ட அவரது ஆதரவாளர்களுடனான பேரணி, மதுரை தோப்பூர் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது எவ்வித தடையுமின்றி கார்களின் பவனி சென்றதை பொதுமக்கள் மிகுந்த வியப்புடன் பார்வையிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.