உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக இதய தின விழா ஆண்டுதோறும் செப்டம்பர் 29 ஆம் தேதி அனுசரிக்கப்படும் நிலையில், இன்று மதுரையில் மாதவன் இதய மையம் மற்றும் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் சார்பில், பொதுமக்களிடம் இதயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர் பேரணி நடைபெற்றது. காந்தி அருங்காட்சியத்தில் தொடங்கிய இந்த பேரணியில் மாணவ, மாணவிகள் இதயம் வடிவமான பலூன் மற்றும் விழிப்பு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கே.கே. நகர் பகுதியில் உள்ள நடைபயிற்சி பூங்கா வரை சென்றனர். அங்கு மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் இதய சிகிச்சை நிபுனர் மாதவன் பேரணியாக வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் இதய நோயாளிகளை அவசர காலத்தில் எப்படி மீட்பது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.