• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு

Byவிஷா

Apr 12, 2024

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. கோடை வெப்பம் அதிகரிப்பால் ஆவின் பால் கொள்முதல் தினசரி சராசரி மூன்று லட்சம் லிட்டர் வரை சரிந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் தினசரி சராசரி பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தினசரி சராசரி 29 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலைமை மோசமாகி பால்கோவா ஐஸ்கிரீம் பால் சார்ந்த இனிப்புகள் போன்ற பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது..,
வெப்பத்தின் தாக்கம் காரணமாக கால்நடைகளின் பால் கறக்கும் திறன் குறைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்ததால், பால் கொள்முதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், அட்டைதாரர்கள் மற்றும் சில்லரை நுகர்வோருக்கு பால் விநியோகம் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே சரிவை ஈடுசெய்ய தயாராகிவிட்டோம். எங்களிடம் போதுமான பால் பவுடர் கையிருப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.