• Thu. May 2nd, 2024

ஆகஸ்ட் 20 அதிமுக மாநில மாநாடு.., நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.., எடப்பாடி பழனிச்சாமி பேட்டி..!

Byவிஷா

Jul 5, 2023

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஆகஸ்ட் 20ல் நடைபெறவிருக்கும் அதிமுக மாநில மாநாடு, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்க உள்ள அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினை வெளியிட்டப்பட்டது. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு எனும் இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதனையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி..,
“அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுக தான். ஒன்றரை மாதத்தில் அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதிமுகவை உடைக்கவும், முடக்கவும் சிலர் கண்ட கனவு தான் தற்போது உடைந்து விட்டது. அதிமுக பல்வேறு பிரிவுகளாக உடைந்து விட்டது என பலரும் விமர்சனம் செய்தனர். ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மாநில மாநாடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அடிதளமாக அமையும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. மேகதாது விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை இருமாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மேகதாது விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்கிறது.
இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார் கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். கர்நாடகா காங்கிரஸ் அரசுடன் பேசி ஜூன் மாத நீர் பங்கீட்டை முதலமைச்சர் ஸ்டாலின் பெறாதது ஏன்? சுப்ரீம்கோட்டின் தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்ட அதிமுக எம்பிக்கள் 24 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் சிறப்பான முறையில் செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டது அதிமுக தான்.
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டுவிட்டது. குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் காய்ச்சல் சிகிச்சைக்கு வந்தவருக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையை கூட சரியாக பராமரிக்கவில்லை. திமுக ஆட்சியில் நிர்வாக திறமையே இல்லை. இனியாவது தூக்கத்தில் இருந்து திமுக அரசு விழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
தக்காளி விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தக்காளி மட்டுமல்ல சின்ன வெங்காயம், பருப்பு, மளிகை சாமான்கள் எல்லாமே விலை உயர்ந்துள்ளன. குட்டி அமைச்சர் ஒருவர் வந்திருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம் எடுக்கிறார் அவரே படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார். விலைவாசி உயர்வை பற்றி முதல்வருக்கு கவலையில்லை. அவரிடம் போய் செய்தியாளர்கள் விலைவாசி உயர்வை பற்றி கேள்வி கேளுங்கள். இவர்கள்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதாக சொல்கின்றனர். இது பொய்யான தகவல். நான் முதல்-அமைச்சராக பதவியேற்ற போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது சட்டசபையில் சபாநாயகர் தனபால் சட்டசபை கூட்டத்தை கூட்டினார். அப்போது அவரது மைக்கை உடைத்து பெஞ்சை உடைத்து பெரிய ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபால் அவர்களின் சட்டையை கிழித்தனர். புனிதமான இருக்கையில் அமர்ந்தனர் திமுகவினர். இவர்களா சமூக நீதியை காப்பாற்றியவர்கள். இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை பாதுகாக்கிறார்கள்..? சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை கீழே இறக்கி எங்களோடு அமர வைத்தீர்களே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி கிடைத்துள்ளதாக பேசுவதற்கு திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது. சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திமுகதான் என்று அவர் கூறினார். கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து தெளிவாக பேசுவோம். பாஜக உடனான உறவு குறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி தெரிவிப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *