தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த வாரம் ஆளில்லாத சில வீடுகளில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி சம்பவங்களில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த திருட்டு முயற்சி சம்பவங்களால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கும் கோரிக்கை வைத்திருந்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் சான்ஸ் உத்தரவின் பேரில் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆலோசனை பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மேற்பார்வையில் உட்கோட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன், காவலர்கள் செல்லத்துரை, சுரேஷ், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், இனாம் மணியாச்சி, சாலைப்புதூர், ஆலம்பட்டி விலக்கு என பல்வேறு பகுதியில் உள்ளிருந்த 40க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது இரண்டு மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது. தெரிய வந்தது. அந்த காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த மர்ம நபர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கைலாச ஊரணி தெருவை சேர்ந்த முருகேசன் மகன் சிவக்குமார் (28)மற்றும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் சாந்தகுமார் (33) என்பது தெரிய வந்தது.

இருவர் மீதும் மதுரை,திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலவில் உள்ளதும், அந்த மாவட்டங்களில் பல்வேறு திருட்டு சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு தலைமறைவாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் சில திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீசார் அவர்களே தேடி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருவரையும் கைது செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களுடைய செல்பேசி எண்களை வைத்து இருப்பிடங்களை கண்டறிந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்ய சென்றபோது அங்கிருந்து எஸ்கேப் ஆகி ஒவ்வொரு இடமாக தப்பிச் சென்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேகமாக வந்த ஒரு கார் இவர்களைப் பார்த்ததும் நிற்காமல் செல்ல முயன்றுள்ளது. அந்தக் காரை போலீசார் மடக்கி பிடித்து உள்ளே பார்த்தபோது திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் மற்றும் சாந்தகுமார் இருப்பது தெரியவந்தது. இதை எடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் கோவில்பட்டி பகுதியில் மீண்டும் திருட்டு சம்பவங்களை அரங்கேற்ற வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

7மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து திருட்டு சம்பவங்களை அரங்கேற்றி வந்த கும்பலை கோவில்பட்டி உட்கோட்ட தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவில்பட்டி பகுதி மக்களிடையே நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அருகில் சாலை வசதி உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளை குறிவைத்து முகத்தை மூடிக்கொண்டு திருடுவது, திருடிய உடன் காரில் தப்பி செல்வது என்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதிலும் குறிப்பாக நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள வீடுகளை குறி குறிவைத்து சம்பவங்களை அரங்கேற்றி வந்துள்ளார்.







; ?>)
; ?>)
; ?>)