அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் தடையை மீறிப்போராட்டத்தில் இறங்கிய இபிஎஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டசபையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, சட்டசபையில் நடைபெற்ற சம்பவம் குறித்து அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித்திருந்தது.
ஆனால், அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை முதலே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் கருப்பு சட்டை ஆணிந்து போராட்டத்தில் ஈடுபட தயாராக இருந்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார்.அப்போது, சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எல்எல்ஏக்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
தடையை மீறிப் போராட்டம் இபிஎஸ் கைது
