
பெருகி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் போதை பழக்கத்தினால் ஏற்படும் சமுதாயம், கலாசார சீரழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக லயன்ஸ் கிளப் 324 D மற்றும் லியோ 324 D மாவட்டம் ஆகியோர் இணைந்து கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் கிளப் 324 டி மாவட்ட ஆளுனர் சண்முக சுந்தரம் மற்றும் ராபர்ட் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளராக ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன் குமார் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, மாற்றம் மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் காளிதாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரணி துவக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் திருட்டு, கொள்ளை, அடிதடி, கொலை, பாலியல் தொந்தரவுகளில் மட்டுமின்றி தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
போதை பொருட்கள் பயன்படுத்துவோர்களுக்கு மட்டுமின்றி அவர்களது குடும்பமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சமுதாயம், கலாசார சீரழிவுகளுக்கும் போதை பழக்கம் காரணமாகிறது. அரசின் வழிகாட்டுதல் படி போதை பொருட்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க காவல்துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
போதை பொருட்கள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் முன் வர வேண்டும். என பேசினர்.
